இளையான்குடிமாற நாயனார் புராணம்



                                 ஓம் நமசிவாய

இளையான்குடிமாற நாயனார் புராணம்
                             "இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"

அவதார தலம் - இளையான்குடி  
முக்தி தலம்     - இளையான்குடி
குருபூசை திருநட்சத்திரம் - ஆவணி , மகம் 


இளையான்குடி என்னும் நகரம் இயற்கை வளத்தோடு, இறைவனின் அருள் வளமும் பரிபூரணமாக நிறையப் பெற்றிருந்தது. இத்திருப்பதியிலே வேளாளர் மரபிலே குலம் பெற்ற பேறாக உதித்தவர் தான் மாறனார். இளையான்குடியில் பிறந்த காரணத்தால் இளையான்குடி மாறனார் என்று அழைக்கப் பெற்றார். எந்நேரமும் எம்பெருமானையும்   ஐந்தெழுத்தையும் சிந்தித்த கொண்டிருப்பார் மாறனார். இவ்வகையில் அடியார்களை அழைத்து வந்து தாமும் அவரொடு மனை புகுந்து அவர் தம் திருவடிகளைக் குளிர்ந்த தூயநீரால் கழுவி நிறைந்த பெருவிருப்போடு, அவர்களைப் புனித இருக்கையில் இருத்தி திருவடி வழிபாட்டினைச் செய்த பின்பு, நால் வகையான உணவுகளை, அறுசுவையோடு, ஒப்பில்லாத தேவர் களுக்குத் தலைவனாய, சிவபெருமானுடைய அடியவர்களை மிக விருப்போடு உணவு உண்ணுமாறு நாடொறும் கொடுத்து வந்தவர்.


கொண்டு வந்து மனைப்பு குந்துகு              குலாவு பாதம்வி ளக்கியேமண்டு காதலினாதனத்திடை              வைத்த ருச்சனை செய்தபின்உண்டி நாலுவி தத்தி லாறு              சுவைத்தி றத்தினில் ஒப்பிலாஅண்டர் நாயகர் தொண்டரிச்சையில்               அமுது செய்யஅ ளித்துளார். 

இவர்கள் இல்லத்தில் இலக்குமி தேவி நிரந்தரமாய்க் குடியிருந்து இவருடைய இறை சேவைக்கு உதவினார் மாறனாரின் உயர்ந்த தன்மையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்ட இறைவர் வளம் கொழிக்கும் காலத்து மட்டுமின்றி வறுமை வாட்டும் காலத்தும் அடியாரைப் போற்றிப் பேணும்  தன்மையுடையார் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டி, அவ்வள்ளலார்க்கு வறுமையை உண்டாக்கினார் எம்பெருமான்

வறுமையைக் கண்டு நாயனார் சற்றும் மனம் தளரவில்லை. எப்பொழுதும் போலவே அவர் தமது சிவத்தொண்டைத் தட்டாமல் செய்து வந்தார். வீட்டிலுள்ள பொருட்களை விற்று  அடியார்க்கு அமுதூட்டும் பணியைத் தொடர்ந்தார். செல்வம் தான் சுருங்கியதே தவிர அவரது உள்ளம் மட்டும் சுருங்காமல் நிறைவு பெற்றிருந்தது. விற்று விற்று கைப்பொருள்கள் அனைத்தும் தீர்ந்ததும் மாறனார் கையிலிருந்த பணத்திற்கு சிறிது  நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். அதில் சிறிதளவு விதை நெல்லை விதைத்தார். அன்றிரவு பயங்கர மழை, காற்றோடு கலந்து பெய்யத் தொடங்கியது. பாதை எங்கும் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. மாறனாருக்கு ஒன்றும் புரியவில்லை. விதை நெல் வீணாகிவிடுமே என்று வேதனைப் பட்டார். மாறனாரும் அவர் தம் மனைவியும், பசியாலும், குளிராலும் வாடினர். இரவெல்லாம் உறக்கமின்றி உணவின்றி  விழித்திருந்தனர். இத்தருணத்தில் அரனார் சிவனடியார்போல் திருவேடம் பூண்டு  மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி  நாயனார் வீட்டிற்குள் வந்து நுழைந்தார். மாறனார் வீடு அடியார்களை எதிர்நோக்கி, இரவும் பகலும்எப்பொழுதும் திறந்தே தான் இருக்கும்.மழையில் நனைந்து வந்த அடியாரைப் பார்த்து துடித்துப்போனார் மாறனார் விரைந்து சென்று அடியாரை வரவேற்று, அவரது மேனியில் வழிந்த ஈரத்தை துவட்டச் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார். மாறனார் அவரிடம், சுவாமி ! சற்று பொறுங்கள்! அமுது சூடாகச் செய்து அளிக்கிறேன் என்றார். எம்பெருமான் அதற்கு சம்மதித்தவர் போல் தலையை அசைத்தார். இந்நேரத்தில் நமக்கு இப்படியொரு சோதனை வந்துவிட்டதே என்று எண்ணாமல்  நாயனார் மனம் தளரவுமில்லை வெறுப்பும் கொள்ள வில்லை. வீடு தேடிவந்த அடியாரின் பசியை எப்படிப் போக்குவது நமக்கு உணவில்லை என்றாலும் பரவாயில்லை என்று எண்ணி  மனைவியிடம் அது பற்றி வினவினார்.

நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்தமக்கு நாமின் னடிசில் தகவுறஅமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென 

சுவாமி ! தங்களுக்குத் தெரியாதா ? இந்த நள்ளிரவு வேளையில் எங்கு சென்று யாரிடம் நான் என்ன கேட்பேன் கேட்டால் தான் கொடுக்க யாரிருக்கிறார்கள் ? எனக் கூறி கண் கலங்க  செய்வதறியாது  திகைத்தனர். இடியும், மழையும் அதிகரித்து மின்னல் பளிச்சிட்டது. அம்மின்னலைப் போல் மனைவியார் உள்ளத்திலும் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அம்மங்கை நல்லாள் கணவரை நோக்கி, சுவாமி எனக்கு ஒரு  யோசனை தோன்றுகிறது, கழனியில் காலையில் நாம் விதைத்த முளை நெல்லை வாரிக்கொண்டு வாருங்கள். இமைப்பொழுதில் குத்தி அரிசியாக்கி அடியார்க்கு அமுதிடலாம் என்றாள்.
செல்லல் நீங்கப் பகல்வித்திய செந்நெல்மல்லல் நீர்முளை வாரிக் கொடுவந்தால்வல்ல வாறமு தாக்கலு மாகுமற்றல்ல தொன்றறி யேன் என் றயர்வுற.  

தக்க சமயத்தில் மனைவியார் கூறிய மொழிகள் அவரது செவியில் அமிர்தம் போல் பாய உள்ளமும் உடலும் பூரித்துப்போனார். புதையல் கிடைத்தாற்போல் உவகை யடைந்து கூடையும் கையுமாகக் கழனியை நோக்கி விரைந்தார். பயங்கர மழை  திக்கு திசை தெரியாத கும்மிருட்டு, மேடு பள்ளம் காண முடியாத அளவிற்குத் தெருவெல்லாம் வெள்ளம் இத்தகைய பயங்கர சூழ்நிலையில் அடியார் மீது பூண்டுள்ள அன்பின் பெருக்கால் நாயனார் இடி மழை கண்டு அஞ்சாது கழனி நோக்கி ஓடினார்.

பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்டுருகு கின்றது போன்ற துலகெலாம். 


நடந்து பழக்கப்பட்ட பாதையானதால் இருளில் தன்னை சமாளித்துக் கொண்டார். மாறனார் மழையில் நனைந்தார். இல்லை, அவர் பக்தியில் மூழ்கினார் என்றுதான் கூறவேண்டும். மனம் குளிர சிவநாமத்தை ஜபித்தார். மிக்க சிரமத்துடன் தண்ணீர் மீது மிதக்கின்ற விதை நெல் முளைகளை வாரிக் கூடையிலே போட்டுக் கொண்டு வீட்டை அடைந்தார். அதற்குள் அவரது மனைவியார் தோட்டத்திலிருந்து கீரை பறித்து வந்தாள். நெல்லை கொடுத்தார் நெல்லை மகிழ்வுடன் வாங்கிக்கொண்ட அம்மையார்  சமைக்க விறகு இல்லையே ? என்றதும் மாறனார் சற்றும் மனம் கசப்படையாமல் வீட்டுக் கூரை மீது இருந்த கொம்புகளை அறுத்தெடுத்து வெட்டிக் கொடுத்தார். அதனால் மழையின் கொடுமை வீட்டிற்குள்ளும் புகுந்தது   அம்மையார் நெல்முளையை பக்குவமாக வறுத்து, குத்தி, அரிசியாக்கி சோறாக்கினாள். பறித்து வந்த கீரை கொண்டு சுவையான கறி யமுதும் செய்தார் . இன்னல்களுக்கிடையே ஒருவாறாக இன்னமுது சமைத்தனர்
  அழுந்திய இடருள் நீங்கி             அடியனேன் உய்ய என்பால்எழுந்தருள் பெரியோய் ஈண்ட             அமுதுசெய் தருள்க வென்றுதொழும்பனா ருரைத்த போதில்             சோதியா யெழுந்து தோன்றச்செழுந்திரு மனைவி யாரும்            தொண்டருந் திகைத்து நின்றார்


அடியவரை அமுதுண்ண மாறனாரும் அவர் மனைவியாரும், ஐயனே! அடியார்களிடம் யாம் பூண்டுள்ள அன்பறிந்து எம் இல்லம் எழுந்தருளிய பெரியோரே! பிறவிக்கடலைக் கடக்க மரக்கலம் இன்றி அழுந்திக் கிடக்கும் இவ்வேழையர் உய்யும் பொருட்டு ஏழையின் மனைக்கு அமுது உண்ண எழுந்தருளும் ! எனப் பணிவன்புடன் வேண்டி நின்றனர். நிலம் கிடந்து நமஸ்கரித்தனர். கண் மூடி தியானித்து நமஸ்கரித்து எழுந்த தெய்வீகத் தம்பதியர் கண் திறந்து பார்த்தபோது  பிறைமுடிப் பெருமான் உமையுடன் விடை மீது எழுந்தருளினார். மாறனாரும், அவரது மனைவியாரும் இத்திருக்காட்சி கண்டு பக்தி பெருக்கோடு மெய் மறந்து துதித்து நின்றனர்.

சங்கரா போற்றி ஞான சம்புவே             போற்றி யாற்றில் வெங்கரா வடுமால்  காணா             விமலனே போற்றி என்றும் செங்கரா மலகம் போன்று திரு          வருள் செய்வோய் போற்றி பொங்கராவணிந்த வேத            புங்கவ போற்றி போற்றி 

மாலயனும், கண்டரியாத அடியவராய் வந்த சிவபெருமான்  மனைவியாருடன் கண்டு திகைத்து நிற்கும் மாறனார்க்கு மயிர்ச்சாந்து  அணிந்த நீண்ட திருமுடியுடைய உமையா ரோடு ஆனேற்றில் எழுந்தருளி சிறந்த முறையில்வழிபாடாற்றிய அடியவரை நோக்கி,
அன்பனே அன்பர் பூசை           அளித்தநீ அணங்கி னோடும்என்பெரும் உலகை எய்தி           இருநிதிக் கிழவன் தானேமுன்பெரு நிதியம் ஏந்தி           மொழிவழி ஏவல் கேட்பஇன்பமார்ந் திருக்க என்றே அருள்            செய்தான் எவர்க்கும் மிக்கான்.
அடியவனே! அடியவர்களுக்கு வழுவாது வழிபாடு செய்து உணவளித்து வந்த நீ, உன் மனைவியோடு பெருமை பொருந்திய சிவலோகத்தையடைந்து, குபேரனே தனக்குரிய நிதிகளைக் கையில் ஏந்தி, உன் ஆணை வழிநின்று நீ பணித்த பணிகளைச் செய்து வர, இன்புற்று இருப்பாயாக என்று யாவர்க்கும் மேலோனாய சிவபெருமான் அருளிச் செய்தார்
மாறனார் தன் மனைவியாருடன் உலகத்தில் பல காலம் வாழ்ந்து, திருத்தொண்டர்களைப் பணிந்தும் பரமனை வழிபட்டும்  இறுதியில் செஞ்சடை வண்ணரின் திருவடி நீழலில் இறுதியில்லா இன்பம் பெற்றார்கள்.


                        போற்றி ஓம் நமசிவாய


                            திருச்சிற்றம்பலம்

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP